மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் 70 பெண்கள் காணாமல் போகின்றனர் - எதிர்க்கட்சித் தலைவர் தான்வே புகார்

By செய்திப்பிரிவு

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் தினமும் 70 பெண்கள் காணாமல் போவதாகவும் இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவை மேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தான்வே வலியுறுத்தி உள்ளார்.

சிவசேனா கட்சியின் (உத்தவ் பிரிவு) மூத்த தலைவரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை மேலவைத் தலைவருமான அம்பாதாஸ் தான்வே துணை முதல்வர் (உள்துறை) தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் சிறுமிகள் உட்பட 5,510 பெண்கள் காணாமல் போய் உள்ளனர். இந்த எண்ணிக்கை மாதாமாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் 70 பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.

பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிராவும் இடம்பெற்றுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மகளிர் ஆணைய தலைவர் ருபாலி சகங்கர் சமீபத்தில், “காணாமல் போகும் பெண்களை கண்டுபிடிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். இது தொடர்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என மாநில அரசை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE