சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு | பிஹார் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து பாட்னா உயர் நீதிமன்றம் விதித்திருக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) மறுத்து விட்டது. வழக்கை ஜூலை 14-ம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது.

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாட்னா உயர் நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி இடைக்கால தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிஹார் மாநில அரசு 11-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தது. விடுமுறைக் கால சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் பிஹார் அரசு, "சாதிவாரி கணக்கெடுப்புக்கு முடிவடையும் தருவாயில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையினால், மாநிலத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்தமாக பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தில் 80 சதவீத சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து விட்டது. சில மாவட்டங்களில் 10 சதவீத பணிகளே மீதம் இருக்கின்றன. அனைத்து செயல்பாடுகளும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன என்பதால் இந்த விவகாரத்தின் இறுதியில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுவதில் சிக்கல் இருக்காது. சாதிவாரி தரவுகள் அரசியலமைப்பின் பிரிவு 15 மற்றும் 16 அடிப்படையிலேயே கேட்கப்படுகின்றன. கணக்கெடுப்பை முடிப்பதில் ஏற்படும் இடைவெளி என்பது இந்த ஒட்டுமொத்த நடைமுறையையும் ஒட்டுமொத்தமாக பாதிக்கும். அதன்பின்னர் தரவுகள் அப்போதையதாக இருக்காது” என்று தெரிவித்திருந்தது.

இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, "உயர் நீதிமன்றத்தில் பிஹார் அரசின் வாதம் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நடைமுறை கணக்கெடுப்பா அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பா என்றும் அதன் இயல்புகளையும் கண்காணிப்போம்" என்று கூறி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

முன்னதாக, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டை விரைந்து முடிக்கக் கோரிய மாநில அரசு மே 9-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை நிராகரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரையில் இடைக்காலத் தடை அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டிருந்தது.

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்ததை அடுத்து, முதல்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. மே 15-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE