பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு - மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்காக (இடபிள்யூஎஸ்) வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை இருப்பதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

5 நீதிபதிகள் தீர்ப்பு: இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.

அதில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா எம். திரிவேதி, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் அப்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் செல்லாது என்றும் அறிவித்தனர்.

மாறுபட்ட தீர்ப்பளிக்கப்பட் டாலும் 5ல் 3 பேர் செல்லும் எனக் கூறியதால் சட்டம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசும் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி கள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பெலா எம். திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

சட்டம் செல்லுபடியாகும்: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என்பது மீண்டும் உறுதி செய் யப்பட்டு உள்ளது.

5ல் 3 பேர் செல்லும் எனக் கூறியதால் சட்டம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE