டெல்லி செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: டி.கே. சிவகுமார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதல்வர் குறித்த ஆலோசனையில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவிக்கு கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமாரும், மூத்த தலைவர் சித்தராமையாவும் போட்டி போடுவதால், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்றது. அப்போது, முதல்வராக யார் வரவேண்டும் என்பது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவரின் விருப்பமும் எழுத்துப்பூர்வமாகப் பெறப்பட்டது. அதோடு, இது குறித்த இறுதி முடிவை கட்சி மேலிடம் எடுக்க ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களில் ஒருவரான பன்வார் ஜிதேந்திர சிங், "அனைத்து எம்எல்ஏக்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை தயார் செய்துள்ளோம். காங்கிரஸ் தலைவருக்கு நாங்கள் அதனை அளிக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

நேற்றைய ஆலோசனைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத், "நேற்றைய கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதோடு, ஒருவரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் பேசிய மேலிட பார்வையாளர்கள், எம்எல்ஏக்களின் கருத்தை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பெற்றுக்கொண்டனர். தற்போது முடிவு டெல்லி மேலிடத்தின்வசம் விடப்பட்டுள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டு அதன் பிறகு மல்லிகார்ஜூன கார்கே முடிவை எடுப்பார்" என தெரிவித்தார்.

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்கச் செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று எனது பிறந்தநாள். மாநிலம் முழுவதும் இருந்து நிறைய ஆதரவாளர்கள் என்னை சந்திக்க வருகிறார்கள். அதோடு, எனது வீட்டில் பூஜை ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் ஒருவரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் விட்டுவிட்டோம். எனக்கு என்ன பணி வழங்கப்படுகிறதோ அதை செய்வேன்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்