Karnataka Election Results | இது பிரதமர் மோடியின் தோல்வி - சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் விமர்சனம்

By செய்திப்பிரிவு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த இந்த தோல்வி பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வி என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 1 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி - 133, பாஜக - 66, மஜத - 22, மற்றவை- 3 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.

காங்கிரஸின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் கர்நாடகாவிலும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தனது வீட்டுக்கு வெளியே தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளன. பிரதமர் மோடி தன்னை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எனவே இது பிரதமர் மோடியின் தோல்வி. பஜ்ரங்பலி யார் பக்கம் நின்றார் என்பது இப்போது தெரிந்திருக்கும். அவரது கதாயுதம் ஊழல்வாதிகளின் தலையில் ஓங்கி அடித்துள்ளது. மோடியின் புகைப்படங்கள் டிவி சேனல்களிலிருந்து மறையத் தொடங்கியதுமே கர்நாடக தேர்தல் முடிவுகளை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE