பெங்களூரு: காங்கிரஸ் கட்சிக்கு அவர்களின் எம்எல்ஏக்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் அதனால்தான் அவர்கள் மற்ற கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ( சனிக்கிழமை ) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, "அனைத்து பூத்துகள் மற்றும் தொகுதிகளில் இருந்தும் முதற்கட்ட தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. நாங்கள் நிச்சயம் மேஜிக் நம்பரை தாண்டி அதிக இடங்களில் வெற்றி பெருவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அதன் வேட்பாளர்களை ஒன்றாக வைத்திருப்பதற்காக ரெசார்ட்டுகளில் அறை முன்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பொம்மை, "அவர்களின் எம்எல்ஏக்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மை பெற முடியாது. அதனால் தான் அவர்கள் பிற கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவது உறுதி என்பதால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. காங்கிரஸ் கட்சி எந்த கூட்டம் வேண்டுமானாலும் நடத்தட்டும். அதை நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு" என்று தெரிவித்தார்.
» Karnataka Election Results | வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்
» Karnataka Election Results| 12 மணி நிலவரம்: 120 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை