கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை | பெங்களூருவில் 144 தடை அமல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதை முன்னிட்டு பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், பெங்களூரு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். மேலும், பெங்களூரு முழுவதும் மதுபான விற்பனைக்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். இது தவிர பெங்களூருவில் உள்ள பதட்டம் மிகுந்த ஐந்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடும் கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

1) வசந்தபுரா பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரி - இங்கு கே.ஆர்.புரம், மகாலட்சுமி லேஅவுட், மல்லேஸ்வரம், ஹெப்பல், புலகேஷி நகர், சர்வக்ஞா நகர் மற்றும் சி.வி ராமன் நகர் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

2) செயின்ட் ஜோசப் இந்தியன் உயர்நிலைப் பள்ளி - இங்கு ஆனேகல், பெங்களூரு தெற்கு, மகாதேவபுரா, பைத்ரனாபுரா, யெலஹங்கா மற்றும் தாசரஹள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

3) பசவங்குடியில் உள்ள பிஎம்எஸ் மகளிர் கல்லூரி - இங்கு சாந்தி நகர், காந்தி நகர், ராஜாஜி நகர், சிக்பேட், சாமராஜ் பேட்டை, ராஜ ராஜேஸ்வரி நகர், சிவாஜி நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

4) திலக் நகரில் உள்ள எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரி - பத்மநாபா நகர், கோவிந்தராஜ நகர், விஜய நகர், ஜெய நகர், பிடிஎம் லே அவுட், பொம்மன ஹள்ளி, பசவனகுடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இங்கு நடைபெறுகிறது.

5) தேவனஹள்ளியில் உள்ள ஆகாஷ் இன்டர்நேஷனல் பள்ளியில் ஹோஸ்பேட், தேவன ஹள்ளி, தொட்டபல்லாபூர், நெலமங்களா ஆகிய தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மேலும், இன்று (மே 13) காலை முதல் நாளை (மே 14) காலை வரை ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் உஷார் நிலையில் இருப்பார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE