கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணியளவில் 65.69% வாக்குப்பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கடைசியாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக வெளியான அறிவிப்பின்படி மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதிவாகியுள்ளது.

மும்முனைப் போட்டி:
கர்நாடகாவில் பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற‌னர். வாக்கு எண்ணிக்கை மே 13 தேதி நடைபெற இருக்கிறது.

கர்நாடகாவில் இந்த முறை, ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE