'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க யோகி ஆதித்யநாத் அரசு முடிவு

By செய்திப்பிரிவு

லக்னோ: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்தரப் பிரதேச அரசு முழு வரிவிலக்கு வழங்க உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்தி மொழியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்து பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக கூறும் இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இப்படம் கடந்த 4 நாட்களில் ரூ.11 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேச அரசு கடந்த 6-ம் தேதி இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்தது. அதை தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசும் வரிவிலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். அதோடு தனது அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து இந்தப் படத்தை யோகி ஆதித்யநாத் பார்க்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உத்தராகண்ட் மாநிலத்திலும் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபுல் ஷா தயாரிப்பில், இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை மேற்கு வங்க அரசு தடை செய்துள்ளது. தமிழ்நாட்டில் திரையரங்குகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, படத்தை 7-ம் தேதி முதல் நிறுத்துவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE