ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம்விட எதிர்ப்பு - தன்னிடம் ஒப்படைக்க கோரி ஜெ.தீபா தரப்பு வாதம்

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 'சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலை, செருப்பு, மின்சாதனப் பொருட்கள், தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை ஏலம் விட வேண்டும்' என கோரியிருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் கர்நாடக அரசு கடந்த மாதம் பெங்களூருவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலியை நியமித்தது.

இந்நிலையில் இவ்வழக்கு பெங்களூரு மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஹெச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்தியகுமார், ''ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் அவரது சட்ட ரீதியான‌ வாரிசான ஜெ.தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும்'' என வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, 'இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் வாரிசுகளுக்கு சேராது. தேவைப்பட்டால் நீங்கள் முறையாக மனு தாக்கல் செய்து, அனுமதி பெற்று வாருங்கள்'' என்று கூறினார்.

அழியும் பொருட்கள்: அப்போது குறுக்கிட்ட சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, ''ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், சால்வைகள், செருப்புகள் போன்றவை அழியக்கூடியவை. எனவே அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து விரைவில் ஏலம் விட வேண்டும்'' எனக் கோரினார்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலி, “இந்த பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் இல்லை. தங்க, வைரம் நகைகள், வெள்ளிப் பொருட்கள் போன்ற விலை உயர்ந்தவை மட்டுமே பறிமுதல் செய்யப்பட் டன. மற்றவை வழக்கின் பொருட்கள் பட்டியலில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன'' என்றார். அதற்கு நரசிம்ம மூர்த்தி, ''பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்க‌ளின் பட்டியலை அரசிடம் கோருகிறேன்'' என தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதி, வருகிற 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE