பஜ்ரங் தள விவகாரம்: பாஜக எதிர்ப்பால் பின்வாங்கிய காங்கிரஸ்

By இரா.வினோத்


பெங்களூரு: பஜ்ரங் தள விவகாரத்தில் பாஜகவின் கடும் எதிர்ப்பால் காங்கிரஸ் கட்சி பின்வாங்கியுள்ளது. அந்த அமைப்பை தடை செய்ய மாட்டோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யப் போவதாக தெரிவித்திருந்தது. இதற்கு பாஜக, பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பெங்களூரு, மங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் பஜ்ரங் தள அமைப்பின் நிர்வாகிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிலிட்டு கொளுத்தினார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி அங்கோலாவில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்கு முன்பாக‌ 'ஜெய் பஜ்ரங் பலி' என முழக்கமிட்ட பிறகே பேச ஆரம்பித்தார். அப்போது அவர், ''காங்கிரஸ் முன்பு ஸ்ரீராம் என கூறிய ராம பக்த‌ர்களை தண்டித்தது. இப்போது பஜ்ரங் தள அமைப்பை தடை செய்வதன் மூலம் ஹனுமான் பக்தர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளது. காங்கிரஸூக்கு பாடம் கற்பிக்கும் வகையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பாக 'ஜெய் பஜ்ரங் பலி' என கூறிவிட்டு, வாக்குசாவடியில் உங்களின் வாக்கை பதிவு செய்யுங்கள்'' என பேசினார்.

இதனால் அந்த கூட்டத்திலே 'ஜெய் பஜ்ரங் பலி' என்ற கோஷம் ஓயாமல் ஒலித்தது. பாஜகவினரின் கடும் எதிர்ப்பால் தேர்தலில் காங்கிரஸூக்கு பாதிப்பு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி,'' பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் திட்டம் காங்கிரஸிடம் இல்லை. வெறுப்பை விதைக்கும் அமைப்புகளை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எங்களின் தேர்தல் அறிக்கையில் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் அமைப்புகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்க‌ளின் அடிப்படையிலே சிலவற்றை குறிப்பிட்டுள்ளோம். ஒரு கட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ், அமைப்பை தடை செய்தார். அதனை திரும்ப பெற்றது ஜவஹர்லால் நேரு தான் என்பதை பாஜகவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE