வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) அதிக ஓய்வூதியத்தை பெறுவதற்கு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இபிஎப்ஓ சந்தாதாரர்கள் அதிக ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து நபர்களும் அதிக ஓய்வூதியத்தை பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 26 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வசதி 3-ம் தேதியுடன் முடிகிறது. அதிக ஓய்வூதியம் கோரி சந்தாதாரர்களிடமிருந்து இதுவரையில் 12 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு இபிஎப்ஓஅறிக்கையில் தெரிவித்துள்ளது.

கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் பல கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக இபிஎப்ஓ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு சிரமத்தையும் எளிதாக்கும் வகையில் அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்குவதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இபிஎப்ஓ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE