புதுடெல்லி: தன்பாலின தம்பதிகளின் திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தன்பாலின திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்காமல் சமூகநல திட்டங்களின் பயன்கள் அவர்களுக்கு வழங்கப்படுமா என மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
7-வது நாளாக விசாரணை
இந்நிலையில், இந்த மனுக்கள் மீது 7-வது நாளாக நேற்று விசா ரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: தன்பாலின தம்பதிகளின் திருமணத்தை அங்கீகரிக்கும் விவகாரத்துக்குள் செல்லாமல், அவர்களின் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிர்வாக நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஆலோசனையை மத்திய அரசு ஏற்கிறது.
இதுகுறித்து ஆராய மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இந்த விவகாரத்தில் எது மாதிரியான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என மனு தாரர்களும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். மேலும் இந்தப் பிரச்சினையில் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.