வருமானத்துக்கு அதிகமாக சொத்து - முன்னாள் மத்திய அரசு அதிகாரி வீட்டில் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் குடிநீர் மற்றும் மின் ஆலோசனை சேவை (இந்தியா) நிறுவனம் (வாப்கோஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக (சிஎம்டி) பணியாற்றியவர் ரஜிந்தர் குமார் குப்தா. இவரது மனைவி ரீமா சிங்கல். இவருக்கு மகன் கவுரவ், மருமகள் கோமல் உள்ளனர்.

ரஜிந்தர் குமார் குப்தா 2019-ம் ஆண்டில் ஓய்வு பெற்றுவிட்டார்.இவரது வீட்டில் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: 2011 முதல் 2019 வரை வாப்கோஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த ரஜிந்தர் குமார் குப்தா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தி ரூ.20 கோடி ரொக்கம், தங்க நகைகள், விலைமதிப்பற்ற பொருட்களை பறிமுதல் செய்தோம். ஓய்வு பெற்ற பின்னர் டெல்லியில் ஆலோசனை நிறுவனம் தொடங்கியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தில் டெல்லி, குருகிராம், சோனிபட், சண்டிகர் நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள், பண்ணை வீடுகளை ரஜிந்தர் வாங்கியுள்ளார். டெல்லி உட்பட 19 இடங்களில் சோதனை நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE