ராகுல் காந்தி மேல்முறையீடு: இடைக்கால தடை விதிக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு; ஜூனில் இறுதி தீர்ப்பு

By செய்திப்பிரிவு

குஜராத்: ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் ஜூன் மாதம் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

2019-ல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?" என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுலின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாக, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த தண்டனைக்கு தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ராகுல் காந்திக்கு, அவரைத் தேர்வு செய்த நாடாளுமன்ற தொகுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாதிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கில், நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறைக்குப் பின்னர் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு வரும் மே 5-ம் தேதி கோடை விடுமுறை. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 5-ம் தேதி மீண்டும் நீதிமன்றம் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE