பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் 3 கோடை சுற்றுலா ரயில்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ், கோடைக் காலத்தில் 3 சுற்றுலா ரயில்கள் முறையே மே 10,11, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன.

பாரத் கவுரவ் ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. மற்ற சேவைகளை தனியார் நிறுவனங்கள் கவனிப்பார்கள். இத்திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில், 9-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்து ரயில்களை இயக்குகின்றன.

இந்நிலையில், கோடைகால சுற்றுலாவுக்காக 3 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை டிராவல் டைம்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.

சென்னையில் இருந்து மே 10-ம் தேதி முதல் ரயில் புறப்படுகிறது. காசி, கயா, பிரயாக்ராஜ், ஹரித்வார், புதுடெல்லி, மதுரா, ஆக்ரா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்ப உள்ளது. 10 நாள்களுக்கான கட்டணம் ரூ.22,500 ஆகும்.

சென்னையில் இருந்து மே 11-ம் தேதி இரண்டாவது ரயில் புறப்படுகிறது. ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க், அமிர்தசரஸ், ஆக்ரா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்ப உள்ளது. இதுதவிர, சென்னையில் இருந்து மே 22-ம் தேதி 3-வது ரயில் புறப்பட்டு, ஹைதராபாத், அஜந்தா எல்லோரா, ஷீரடி, மும்பை , கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.railtourism.com என்ற இணையதளம் மூலமாகவும், 7305858585 என்ற செல்போன் எண் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE