சண்டிகர்: சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரும் பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்தவருமான பிரகாஷ் சிங்பாதல் (95) கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.
பாதலின் உடல், சண்டிகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் வைக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பாதலின் உடல், முக்த்சார் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நேற்று அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு பாதலின் மகன் சுக்பீர் சிங் பாதல் தீமூட்டினார். இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.