“விரக்தியின் வெளிப்பாடு” - காங். பற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியும் விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்" என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தல் தொடர்பாக பாஜக பூர் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பிரதமர், “காங்கிரஸுக்கு வாக்களித்த மக்கள், அக்கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இனி வாக்குறுதிகள் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. காங்கிரஸ் என்றாலே ஊழல் மற்றும் பொய்யான வாக்குறுதி என்று அர்த்தம். இனி காங்கிரஸ் கட்சி என்ன வாக்குறுதிகளை வழங்கும். அதன் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி விட்டன" என்று தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகள் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அமித் ஷா, யோகிக்கு பின்னர், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மையின் காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளியிடுவதில் இது பிரதமர் மோடியின் முறை. மே 10-ம் தேதி கர்நாடகா மக்கள் 40 சதவீத கமிஷன் அரசுக்கு உறுதியாக முடிவு கட்டுவார்கள். அதற்கு அடுத்த சில நாட்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல, கர்நாடகாவிலும் நிறைவேற்றும்.

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்: ராஸ்தானில் காங்கிரஸ் அரசு, பழைய பென்ஷன் திட்டத்தினை அமல், 125 வேலை உறுதி, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச அவசரகால சிகிச்சை, சிரஞ்சீவி யோஜனா மூலம், தனியார் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் காப்பீடு மற்றும் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு, 17.87 லட்சம் விவசாயிகளின் ரூ.9270 கோடி கடன் தள்ளுபடி, நெல் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை, ராஜீவ் காந்தி கிஸான் நியாய் யோஜனா மூலமாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.9,000 மானியம், பழைய பென்ஷன் திட்டம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் பழைய பென்ஷன் திட்டம், பெண்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை, இத்திட்டத்தின் முதல் பகுதியில் 2.5 லட்சம் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2019-ல் ‘ஆப்ரேஷன் கமலா’ மூலமாக திருட்டுத்தனமாக பாஜக ஆட்சியை பறிப்பதற்கு முன்பு, 2013 - 2018 வரை கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு நிலையான ஆட்சியை வழங்கி 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. 261 வாரங்களில் 261 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவைகளை காங்கிரஸ் உறுதியாக செயல்படுத்தும்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கேள்வி: பிரதமரின் கருத்து குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "2013-லிருந்து 2018 வரை கர்நாடகாவில் நாங்கள் ஆட்சியில் இருந்தோம். அப்போது 100 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. உங்களிடம் ஏதாவது தரவுகள் உள்ளதா? ஊழல் பற்றி பேசும் நீங்களே ஊழல்வாதிகளை உங்களின் பரப்புரையாளர்களாக ஆக்கியிருக்கிறீர்கள். நாங்கள் இதைச் சொல்லவில்லை. கர்நாடகா மக்கள் இதைச் சொல்கிறார்கள். ஒரு பெய்யை மீண்டும் மீண்டும் கூறி உண்மையாக்கும் பழக்கம் மோடிஜிக்கு உண்டு என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த முறை அது கர்நாடகாவில் வேலை செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவில் கலவரங்கள் உண்டாகும் என்று பேசிய அமிஷ் ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்மாநில காங்கிரஸ் கட்சி காவல் துறையில் புகார் அளித்துள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் கூறுகையில், "இந்த விவாகரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை ஒரு சாதாரண மனிதன் பேசியிருந்தால் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் நடக்கும் என்று ஓர் உள்துறை அமைச்சர் பேசக்கூடாது. அவர் நாட்டின் உள்துறை அமைச்சர், பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் அல்ல" என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE