புதுடெல்லி: தன்பாலினத்தவர்களின் திருமணத் துக்கு சட்ட ரீதியாக அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.கே.பட், ஹிமா கோலி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “சமுதாயத்தில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மிகவும் சிக்கலான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை கையாள்வதற்கான வசதிகள் உச்ச நீதிமன்றத்திடம் இல்லை.
குறிப்பாக, தன்பாலின ஈர்ப்பாளர்களில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இந்நிலையில், ஆண், பெண் திருமணம் செய்து கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைக்கு நிகராக இவர்களுக்கும் அந்த உரிமையை நீதிமன்றத்தால் வழங்க முடியாது. எனவே, இந்தவிவகாரத்தில் முடிவு எடுக்கும்அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் விடுவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.