இந்திய சர்க்கஸ்களின் முன்னோடி ‘ஜெமினி சங்கரன்’ உடல்நலக் குறைவால் காலமானார்

By செய்திப்பிரிவு

கண்ணூர்: இந்திய சர்க்கஸ் கலையின் முன்னோடியும், ஜெமினி சர்க்கஸின் நிறுவனருமான ‘ஜெமினி சங்கரன்’ உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுக்காக ஜெமினி சங்கரன் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். சங்கரனின் மறைவுக்கு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் தனது இரங்கல் குறிப்பில்," வெளிநாட்டுக் கலைஞர்களின் திறமைகளை உள்ளடக்கி இந்திய சர்க்கஸ் கலையை நவீனமயமாக்குவதில் சங்கரன் முக்கிய பங்கு வகித்தார். அவரது இழப்பு நாட்டிற்கும் சர்க்கஸ் கலைக்கும் பேரிழப்பாகும்" என்று தெரிவித்துள்ளார். சங்கரன் பல்வேறு குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜெமினி சங்கரன்’என அறியப்படும் சங்கரன், 1924ம் ஆண்டு பிறந்தார். தற்காப்புக் கலைகள், ஜிம்னாஸ்டிக் போன்றவற்றில் பயிற்சி கொடுத்துவந்த கீலெரி குஞ்சிக் கண்ணனிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர், ராணுவத்தில் இணைந்து இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஓய்வு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு சர்க்கஸ் கம்பெனிகளுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, 1951 ஆம் ஆண்டு விஜயா சர்க்கஸை வாங்கி அதற்கு ஜெமினி சர்க்கஸ் என்று பெயர் மாற்றினார். பின்னர் அவர் தனது இரண்டாவது சர்க்கஸ் கம்பெனியான ஜம்போ சர்க்கஸை தொடங்கினார்.

நாட்டின் சர்க்கஸ் கலைக்கு சங்கரன் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. சங்கரனுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சங்கரனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை பையாம்பலம் கடற்கரையில் வைத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE