புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,178 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 10,112 என்றளவில் இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 7,718 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 65,683 ஆக உள்ளது. கடந்த 69 நாட்களுக்கு பின்னர் மொத்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,345 ஆக உள்ளது.
அதேவேளையில் நோயிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,43,01,865 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.