கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமி (63) கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள மனிபால் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் உடல்நிலையை டாக்டர் சத்யநாராயணா கண்காணித்து வருகிறார். குமாரசாமிக்கு தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவின் அடிப்படையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில், “குமாரசாமி உடல்நிலை குறித்து கட்சித் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். அவர் விரைவில் குணமடைந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பார்” என கூறப்பட்டுள்ளது.

குமாரசாமி சமீபத்தில் இதயம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE