புதுடெல்லி: மாநில அளவில் தலைமை நீதிபதி தலைமையில் குறைதீர்ப்பு குழுவை, அனைத்து உயர் நீதிமன்றங்களும் அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த முடியாது என வலியுறுத்தியுள்ளது.
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் புகார்களை தீர்க்க தகுந்த அமைப்பை உருவாக்க உத்தரவிட வேண்டும் என டேராடூன் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இதை நீதிபதிகள் எம்.ஆர் ஷா மற்றும் அஷானுதீன் அமனுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினால், அல்லது தங்கள் பணியிலிருந்து விலகியிருந்தால், அது நீதிமன்ற பணிகளை பாதிக்கும். அதனால்தான் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் அவ்வப்போது வலியுறுத்தியுள்ளது. வழக்கறிஞர்கள் யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் சந்திக்கும் நியாயமான பிரச்சினைகளை தீர்க்க அனைத்து உயர்நீதிமன்றங்களும், தலைமை நீதிபதி தலைமையில் மாநில அளவிலான குறைதீர்ப்பு குழுவை உருவாக்க வேண்டும். தலைமை நீதிபதி, மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர், வழக்கறிஞர் சங்க தலைவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஆகியோர் நியமிக்கும் மேலும் இரண்டு மூத்த நீதிபதிகளும் இந்த குழுவில், இடம் பெற வேண்டும்.
» அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று
» 2002 குஜராத் கலவரத்தில் 11 முஸ்லிம்கள் எரித்து கொல்லப்பட்ட நரோடா வழக்கில் 67 பேரும் விடுவிப்பு
மாவட்ட அளவில் தனி குறைதீர்ப்பு குழுக்களை அமைக்க வேண்டும். இங்கு வழக்கு தாக்கல் செய்வது அல்லது பட்டியலிடுவதில் நடைமுறை மாற்றம், கீழ் நீதிமன்ற உறுப்பினர்களின் தவறான நடத்தை ஆகியவை தொடர்பான நியாயமான குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.