ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாத தாக்குதல் - 5 வீரர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஜம்மு/புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில், ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE