அமிர்தசரஸ்: சீக்கிய பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கின் மனைவி கிரண்தீப் கவுர், லண்டன் தப்ப முயன்றபோது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங். இவர் மீதும் இவரது சகாக்கள் மீதும் கொலை முயற்சி, போலீஸார் மீது தாக்குதல், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல், மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பஞ்சாப் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அமரித்பால் சிங்கை கடந்த 1 மாதத்துக்கும் மேலாக போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அம்ரித்பாலின் மனைவி கிரண்தீப் கவுர் லண்டன் செல்ல முயன்றபோது, அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அவரை குடியேற்றத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான கிரண்தீப் கவுரை கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அம்ரித்பால் சிங் திருமணம் செய்து கொண்டார். அமிர்தசரஸில் உள்ள அம்ரித்பாலின் பூர்வீக கிராமத்தில் இந்த திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தனது மனைவி தன்னுடன் பஞ்சாபில் வசிப்பார் என அம்ரித்பால் சிங் கூறியிருந்தார்.
» அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று
» வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த முடியாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு