2002 குஜராத் கலவரத்தில் 11 முஸ்லிம்கள் எரித்து கொல்லப்பட்ட நரோடா வழக்கில் 67 பேரும் விடுவிப்பு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் நரோடா பாட்டியா கிராம படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் உள்பட 67 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தள தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் விஎச்பி முன்னாள் தலைவர் ஜெய்திப் படேல் உள்ளிட்டோர் குற்றம் சட்டப்பட்டிருந்தனர்.

குஜராத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் கடந்த 2002-ம் ஆண்டு உ.பி.யில் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு யாத்திரை சென்றனர். அவர்கள் பிப்ரவரி 27-ம் தேதி ரயில் மூலம் குஜராத் வந்து கொண்டிருந்தனர். அப்போது கோத்ரா என்ற இடத்தில் ஒரு கும்பல் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் 59 கரசேவகர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மதக் கலவரம் மூண்டது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மையினர் ஆவர்.

இந்த கலவரத்துக்கு அடுத்த நாள், வடக்கு அகமதாபாத்தில் உள்ள நரோடா பாட்டியா கிராமத்தில் 11 முஸ்லிம்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். நரோதா பாட்டியா வழக்கில், பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங்தளத்தின் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. மரணம் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் குஜராத் உயர்நீதிமன்றம் மாயா கோட்னானியை விடுதலை செய்தது. எனினும், பாபு பஜ்ரங்கியின் தண்டனையில் மாற்றம் இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குஜராத் படுகொலைகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ஒன்பது வழக்குகளில் நரோடா கிராம படுகொலை வழக்கும் ஒன்று. முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே ராகவன் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த வழக்கை விசாரித்தன.

இந்த வழக்கின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் போலீசார் என 187 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 14 ஆண்டுகளுக்கு முன்பு 2009ல் தொடங்கிய இந்த வழக்கின் விசாரணை, கடந்த 5ம் தேதி முடிந்தது என இதனை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கே.பக்ஷி அறிவித்தார்.

முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் மொத்தம் 86 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் 18 பேர் விசாரணை நிலுவையில் இருந்தபோது இறந்த நிலையில், ஒருவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டார். இதனால் 67 பேர்மீது குற்றச்சாட்டு இருந்தது. தீர்ப்பு நாளான இன்று குற்றம் சாட்டப்பட்ட 67 பேரில், 65 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை, கலவரம், சட்டவிரோதமாக ஒன்றுகூடல், குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்ட நிலையில், இன்று அனைவரையும் விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்.

தீர்ப்புக்கான எந்த காரணத்தையும் சிறப்பு நீதிமன்றம் வெளியிடவில்லை. விடுதலை உத்தரவு பிறப்பித்தவுடன், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தீர்ப்பை வாழ்த்தி "ஜெய் ஸ்ரீராம்" மற்றும் "பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE