புத்தரின் போதனைகள் உலக பிரச்சினைகளுக்குத் தீர்வை தருகின்றன: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: போர், பொருளாதார ஸ்திரமின்மை, பயங்கரவாதம், மத தீவிரவாதம், பருவநிலை மாற்றம் என உலகம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் புத்தரின் போதனைகள் தீர்வைத் தருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச பவுத்த உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ''புத்தர் காட்டிய வழியை இந்தியா பின்பற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு இந்தியா உதவுகிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா உதவியது. ஒவ்வொரு மனிதனின் வலியையும் இந்தியா தனது சொந்த வலியாகக் கருதுகிறது.

மக்களும் நாடுகளும் தங்களுக்கான நலன்களில் ஆர்வமுடன் இருப்பதோடு, உலகின் நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். ஏழைகள் குறித்தும், வளங்கள் இல்லாத நாடுகள் குறித்தும் உலகம் சிந்திக்க வேண்டும். புத்தரின் கருத்துக்களைப் பரப்பவும், அவருக்கு குஜராத்தோடும், எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியோடும் இருக்கும் தொடர்புகள் ஆகியவற்றை மக்களிடையே கொண்டு செல்லவும் எனது அரசு தொடர்ந்து முயன்று வருகிறது'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தற்கால சவால்களுக்கான தீர்வுகள்: நடைமுறையை நோக்கி தத்துவம் என்ற கருப்பொருளில் சர்வதேச பவுத்த உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்றும் நாளையும் நடக்கிறது. சர்வதேச பவுத்த கூட்டமைப்புடன் இணைந்து மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இந்த மாநாட்டை நடத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE