மேற்கு வங்கத்தில் 5,662 சதுர அடி இடத்தை காலி செய்ய அமர்த்தியா சென்னுக்கு விஸ்வ பாரதி பல்கலை. நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 5,662 சதுர அடி நிலத்தை 15 நாட்களுக்குள் காலி செய்ய அமர்த்தியா சென்னுக்கு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தின் சாந்தி நிகேதன் பகுதியில் மத்திய அரசுக்குச் சொந்தமான விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உள்ளது. அதே சாந்தி நிகேதன் பகுதியில் தனது தந்தை வாழ்ந்த வீட்டில் நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென் வாழ்ந்து வருகிறார். 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் அவரது தந்தைக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. அதை ஒட்டிய 5,662 சதுர அடி நிலமும் அமர்த்தியா சென்னின் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலம் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது என்றும், அதனை அமர்த்தியா சென் ஆக்கிரமித்திருப்பதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கக் கோரி விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சார்பில், அமர்த்தியா சென்னுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ''மத்திய அரசின் ஆலோசனையின்படியும், சிஏஜி அறிக்கையின்படியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை மீட்க வேண்டிய அவசரத் தேவை பல்கலைக்கழகத்திற்கு இருக்கிறது. எனவே, நீங்கள் ஆக்கிரமித்துள்ள 5,662 சதுர அடி நிலத்தை காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல் துறையைக் கொண்டு நிலம் கையகப்படுத்தப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அமர்த்தியா சென், 5,662 சதுர நிலம் தனது தந்தையால் வாங்கப்பட்டது என்றும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE