பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூருவில் உள்ள புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு தமிழக முன்னாள் முதல் வர் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. பெங்களூருவில் காந்தி நகர், கோலார் தங்கவயல் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்கட்சியை சேர்ந்த பக்தவச்சலம், எம்.முனியப்பா ஆகியோர் எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் வரும் மே 10-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தி, நேற்று வேட்பாளரை அறிவித்தார்.
அதன்படி, பெங்களூருவில் உள்ள புலிகேசிநகர் தனி தொகுதியில் அதிமுக சார்பில் அவைத் தலைவர் அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த தொகுதியில் அன்பரசன் கடந்த 2008 மற்றும் 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு சுமார் 1000 வாக்குகளை பெற்றார்.
தீவிர பிரச்சாரம்: கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பெங்களூரு மாநகராட்சி தேர்தலில், இந்த தொகுதிக்குட்பட்ட முனீஸ்வரன் பிளாக் வார்டில் போட்டியிட்ட அன்பரசன், 2418 வாக்குகளை பெற்றார். அதனால் அவருக்கு இந்த தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட் டுள்ளது. இன்று அன்பரசன் வேட்பு மனுதாக்கல் செய்ய இருக்கிறார். தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவும் முடிவெடுத்துள்ளார்.