கோவிட் பாதிப்பு | அன்றாட தொற்று 8000-க்கும் கீழ் குறைந்தது; சுகாதார அமைச்சகம் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கோவிட் தொற்று கடந்த இரண்டு நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் புதிதாக 7,633 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 61,233 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,633 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 61,233 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன் கிழமை 10,158 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை,11,109 பேர் பாதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 10,753 ஆகவும், சனிக்கிழமை 10,093 ஆகவும் பதிவாகி இருந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, 9,111 ஆக இருந்து அன்றாட பாதிப்பு, திங்கள்கிழமை 8,000 கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 42 ஆயிரத்து 474 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 4 பேர், ஹரியாணா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர், கேரளாவில் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து152 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE