சூடான் வன்முறையில் இந்தியர் உயிரிழப்பு - மே மாதம் நாடு திரும்ப இருந்த நிலையில் சோகம்

By செய்திப்பிரிவு

கண்ணூர்: சூடான் தலைநகர் கர்த்தூமில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இவர், மே மாதம் சொந்த ஊர் திரும்ப இருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் தனது மனைவி மற்றும் மகளை ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக சூடான் அழைத்திருந்தார். மீண்டும் அவர்களுடன் மே 3-ம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை (ஏப்.15) அகஸ்டின் தனது ஃப்ளாட்டின் ஜன்னலோரமாக நின்று இங்கிலாந்தில் இருக்கும் தனது மகனுடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திசைமாறி வந்த துப்பாக்கித் தோட்டா ஒன்று அவரைத் தாக்கி காயப்படுத்தியதில் அவர் உயிரிழந்தார் என்று அகஸ்டினின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "துப்பாக்கிச் சூடு நடந்தபோது அகஸ்டினுடன் அவரது மனைவியும் மகளும் இருந்தனர். காயங்களின்றி தப்பித்த அவர்கள் ஃப்ளாடில் உள்ள பதுங்கு தளத்திற்கு சென்று ஒளிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என இந்திய தூதரகமும், அகஸ்டின் வேலை பார்த்த நிறுவனமும் தெரிவித்தது" என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், "அகஸ்டினின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். மேலும் அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, கேரள காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.சுதாகர், இந்த விவகாரத்தில் தலையிட்டு அகஸ்டினின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதிகாரபூர்வ தகவலின்படி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் வசித்தும் 1,500 பேர் உட்பட சுமார் 4,000 இந்தியர்கள் அங்கு வசித்து வருகின்றனர். சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், துணை ராணுவப்படைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கர்த்தூமின் பல்வேறு பகுதிகளில் கலவரம் நடந்து வருகிறது.

சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு சூடான் ராணுவம் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அந்த ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைப்பது தொடர்பாக ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையில் மோதல் நடந்தது வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE