திறந்தவெளியில் நடந்த மகாராஷ்டிர அரசு விருது வழங்கும் விழா - வெயிலின் தாக்கத்தால் 11 பேர் பலி

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவில் திறந்தவெளியில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு அரசு விருது (மகாராஷ்டிரா பூஷன் விருது) வழங்கும் விழா நடந்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று விருது வழங்கினார். மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டே மற்றும் பட்நாவிஸ் பங்கேற்றனர்.

நவி மும்பையில் உள்ள பிரமாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த அதில், மேடை நிகழச்சிகளைக் காணும் வகையில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் செய்யப்பட்டிருந்த அதேநேரத்தில் பந்தல் எதுவும் போடப்படவில்லை.

காலை 11.30 மணிக்கு தொடங்கிய பரிசளிப்பு விழா மதியம் 1 மணி வரை நடந்தது. அந்த நண்பகலில் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டது. இதனால் கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கடும் வெயிலால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE