புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அப்போது சிஆர்பிஎப் வீரர்களை காஷ்மீர் அனுப்ப விமானம் கேட்கப்பட்டதாகவும், இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகவும், பாதுகாப்பு குறைபாடுகளால்தான் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என கூறினார். மேலும், ஜம்மு காஷ்மீர் பற்றி பிரதமர் மோடிக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி பாஜக அரசை எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. 2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு தனது கவுரவத்தை காப்பதற்காக இச்சம்பவத்தை பிரதமர் மோடி மறைத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா, சத்யபால் மாலிக்கின் பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில் ராகுல் காந்தியை ‘அரசியல் சிறுவன்’ எனவும், 370-வது சட்டப்பிரிவை ஆதரிப்பதாக ராகுல் கூறினால், மக்கள் செருப்பால் அடிப்பர் என சத்யபால் மாலிக் கூறிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
அமித் மாள்வியா மேலும் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி, பாஜக அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து வந்த சத்யபால் மாலிக், தற்போது தலை கீழாக மாற்றி பேசுவது அவரது நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது’’ என்றார்.
» முதல்வர் கேஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை - டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆஜரானார்
» தமிழ் வளர்ச்சியின் பெயரால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயல்கிறதா பாஜக?