புதுடெல்லி: ‘‘கருணை மனுக்களை முடிவு செய்வதில் ஏற்படும் நீண்ட தாமதத்தை, மரண தண்டனை குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர்’’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் சகோதரிகள் இருவர் 13 குழந்தைகளை கடத்தி, அதில் 9 பேரை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டுஉத்தரவிட்டது. இந்த தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு சரியே என உச்ச நீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து இவர்கள் தாக்கல் செய்த கருணை மனுக்களை ஆளுநர் கடந்த 2013-ம் ஆண்டும், குடியரசுத் தலைவர் 2014-ம் ஆண்டும் நிராகரித்தனர். இவர்களின் கருணை மனுக்கள் அரசிடம் சுமார் 7 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் நிலுவையில் இருந்தன. இதனால் இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், மகாராஷ்டிரா அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி. ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
» டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் - மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நாளை ஆஜராகிறார்
» ராணுவ நிலம் மோசடியாக விற்பனை - ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகாரி உட்பட 7 பேர் கைது
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை எடுத்த பின்பும், மரண தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக் களை பரிசீலிப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. இது மரண தணடனையின் நோக்கத்தை வீணாக்குகிறது. இதை மரண தண்டனை குற்றவாளிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். கருணை மனுக்களை பரிசீலிப்பதில் மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
அப்போதுதான் குற்றவாளிகள் தங்கள் விதியை அறிய முடியும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதிகிடைக்கும். குற்றத்தின் தன்மையும்,கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதமும், தண்டனை குறைப்புக்கு பரிசீலிக்க கூடியது என்பதால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தண்டனை குறைப்பு தீர்ப்பில் தலையிட தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.