பாட்னா: பிஹாரில் ‘பீம் ஆர்மி’ அமைப்பின் உள்ளூர் தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிஹாரின் வைசாலி மாவட்டம், லால்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சதாமியா கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் பாஸ்வான். பீம் ஆர்மி அமைப்பின் உள்ளூர் தலைவரான இவர் நேற்று காலையில் அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுடப்பட்டார். அவரை சந்திக்க வந்த 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாஸ்வான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உடலை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டுவந்து விட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்று வருகின்றனர்.