சண்டிகர்: கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த தனது குழந்தையின் இழப்பீடு தொடர்பாக ஹரியாணாவைச் சேர்ந்த ஜாஹுல் என்பவர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ரிது தாகூர் முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:
சாலை விபத்துகளில் சிறார்களின் மரணத்துக்கான இழப்பீடு பாதிக்கப்பட்டவர்களின் நிதி நிலை அல்லது உரிமை கோருபவரின் நிதி நிலையை மட்டும் சார்ந்து இருக்க முடியாது.
அதேபோன்று, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அகால மனித உயிர் இழப்பை வருவாய் இழப்பு அல்லது பண இழப்பின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிட முடியாது.
ரூபாயின் மதிப்பு 2023-ல் மேலும் சரிந்துள்ளது. பொருளாதாரத்தில் பொதுவான பின்னடைவு காணப்படுகிறது. மேலும், இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து அந்த மைனர் குழந்தையின் உயிரைப் பறிக்காமல் இருந்திருந்தால் அவரது பெற்றோர் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பர். இந்த இழப்பை ஈடு செய்யும் விதமாக இறந்த குழந்தையின் வருமானத்தை ஆண்டுக்கு ரூ.50,000 என்ற அடிப்படையில் கணக்கிட வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.