திருவனந்தபுரம்: கேரளாவில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கவும் சமையல் சிலிண்டர்களை தனியார் வாகனத்தில் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அண்மையில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட சம்பவத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். 3 பேரின் உடல்கள் பிறகு தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஷாரூக் ஷபி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் முழு ரயிலையும் எரிக்க சதித் திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் 2002-ல் இயற்றப்பட்ட பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவனங்கள் சட்டத்தை கண்டிப்புடன் செயல்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பெட்ரோல் நிலையங்கள் இனி, பாட்டில்களில் எரிபொருள் விற்பனை செய்ய முடியாது. எரிபொருள் இன்றி ஒருவரின் வாகனம் பாதி வழியில் நின்றால் கூட அவரால் பாட்டிலில் பெட்ரோலில் வாங்கி வர முடியாது. மேலும் பயணிகளுடன் எந்தவொரு பேருந்தும் இனி எரிபொருள் நிரப்ப இயலாது.
» என்னை சிறையில் அடைத்தாலும் மக்களுக்காக உழைப்பேன் - வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்
» தென்மேற்குப் பருவமழை 96% வரை பெய்யும்: மத்திய புவி அறிவியல் துறை தகவல்
சமையல் காஸ் சிலிண்டர்களை கார், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்களில் எடுத்துச் செல்லவும் இனி அனுமதியில்லை. காஸ் சிலிண்டர்களை ஒருவர் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றால் கூட அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.