ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், பெத்தபள்ளி மாவட்டம், காமன்பூர் மண்டலத்தில் உள்ள கிருஷ்ணம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லீலாம்மாள் (55). இவர் தனது வீட்டில் கடந்த ஒரு வருடமாக பூனையை பாசமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை பூனையை காணவில்லை. பல இடங்களில் லீலாம்மாள் பூனையைத் தேடியுள்ளார். ஆனால் பூனை வீடு திரும்பிவில்லை. மறுநாள் காலை வீட்டின் அருகே இருந்த தரைக்கிணற்றில் பார்த்த போது அதில், பூனை விழுந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இதைக் கண்ட லீலாம்மாள் ஒரு கோணிப்பையை கயிற்றால் கட்டி அதனை கிணற்றில் விட்டு பூனையை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.