ராமநவமி கொண்டாட்டத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு மே.வங்கத்தில் வன்முறை: உண்மை கண்டறியும் குழு அறிக்கை

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ராமநவமியை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாநகரில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக வேறொரு பிரிவினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். கடைகள், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த வழக்கில் 36 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு அமைதி திரும்பிய நிலையில், ஷிப்பூர் பகுதியில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதேபோல் ஹூக்ளி மாவட்டத்திலும் கலவரச் சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து 6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கலவரங்கள் நடைபெற்ற பகுதிளில் ஆய்வு செய்து நேற்று அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராம நவமி கொண்டாட்டத்தின் போது நடந்த வன்முறை, கலவரச் சம்பவங்கள் அனைத்தும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டவை. அனைத்துச் சம்பவங்களும் நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டும் வகையில் அங்கு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ராம நவமி ஊர்வலங்களுக்கு சற்று முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா தர்ணாவில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பேசும்போது, ‘முஸ்லிம் பகுதிகள்' வழியாக எந்த ஊர்வலம் சென்றாலும், அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியுள்ளார். இதன்மூலம் கலவரத்தைத் தூண் டும் வகையில் அவர் பேசியது தெரிய வந்துள்ளது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இந்த கலவர வழக்குகளை தேசிய விசாரணை முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும்.

இதன்மூலம் விசாரணை நியாயமான முறையிலும், பாரபட்சமற்ற முறையிலும் நடைபெறும். கலவரம் நடந்த இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE