புதுடெல்லி: உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடங்கிய பிறகு இந்தியா வரும் முதல் உக்ரைன் அமைச்சர் எமின் தபரோவா. இந்த போருக்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடியின் குரல் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், எமின் தபரோவாவின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லி வந்துள்ள எமின் தபரோவா, வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் சென்றார். அங்கு, அவர் மேற்கத்திய நாடுகளுக்கான இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் வெர்மாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவு, உக்ரைனில் தற்போதுள்ள சூழல், உக்ரைன் மீதான போர் ஏற்படுத்தி இருக்கும் சர்வதேச தாக்கம் ஆகியவை குறித்து இருவரும் கருத்துக்களை பகிர்ந்துகொள்வார்கள் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதோடு, இந்த பயணத்தின்போது, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் எமின் தபரோவா சந்தித்துப் பேச உள்ளார்.
மேலும், இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைனுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைன் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்திய ஊடகங்கள் மற்றும் சிந்தனையாளர்களிடம் எடுத்துரைப்பார் என்றும், இதன்மூலம், இந்தியாவில் உக்ரைனுக்கான ஆதரவை அவர் திரட்ட முயல்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
» கர்நாடகாவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு எதிர்ப்பு
» “சதிகாரர்களால் பாலாசாகேப்பின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லமுடியாது” - கபில் சிபல்
அதோடு, உக்ரைனுக்கு இந்தியாவின் உதவியை அவர் கோருவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, போர் காரணமாக சேதமடைந்துள்ள மின் உற்பத்திக்கான உள்கட்டமைப்புகளை சரிசெய்வதிலும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வழங்குவதிலும் இந்தியாவின் உதவியை எமின் தபரோவா கோருவார் என கூறப்படுகிறது.
இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க இந்தியா அழைப்பு விடுக்க எமின் தபரோவா வேண்டுகோள் விடுப்பார் எனத் தெரிகிறது. மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும் ஜூலை மாதம் இந்தியா வர இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு "அமைதிக்கான வலுவான செய்தியை" இந்தியா நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் எமின் தபரோவா முன்வைக்க உள்ளார்.