இந்தியாவில் 5,880 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: மொத்தமாக 35,199 பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுகிழமை) ஒரே நாளில் புதிதாக 5,880 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 35,199 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 5,880 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 35,199 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரத்து 318 ஆக உள்ளது.

கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லி, இமாச்சலப் பிரதேசத்தில் தலா 4 பேர், குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 1 ஒருவர், கேரளாவில் 2 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், நாட்டின் பல நகரங்களில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, ஹரியாணா, கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, டெல்லியிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE