சீன தொடர்பு | பல்க் மெசேஜ் சேவை வழங்கும் 120 ஐடிக்களை ப்ளாக் செய்தது மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாடிக்கையாளர்களுக்கு பல்க் மெசேஜ் அனுப்பும் சேவை வழங்கும் நிறுவனங்கள் சிலவற்றில் சீன ஹேக்கர்களின் கைவரிசை இருப்பதாக அறியப்பட்டதால் அவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஹெட்டர்கள் அல்லது செண்டர் ஐடி எனப்படும் இவற்றை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த இரண்டு மாதங்களாக கண்காணித்து அளித்த தகவல்களின்படி தடை செய்துள்ளதாக தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் 2 மாதங்களில் 120 ஹெட்டர்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதற்கான ஆய்வை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் இயங்கும் இந்தியன் சைபர் க்ரைம் கோஆர்டினேஷன் சென்டர் மேற்கொண்டு மத்திய அரசுக்கு ஆய்வறிக்கையை அனுப்பியுள்ளது. அதன்பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றத்துக்கு உதாரணம்: பல்க் மெசேஜில் என்ன வகையான சைபர் க்ரைம் செய்யப்படுகிறது என்பதற்கு ஓர் உதாரணத்தை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் மேற்குவங்க மாநில மின்வாரியத்தின் பல்க் மெசேஜ் ஹெட்டர் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டது. அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணம் நிலுவை இருப்பதாகவும் அதனை உடனடியாக செலுத்த இந்த லிங்கை க்ளிக் செய்யவும் என்று கூறி குறுந்தகவல் பறந்துள்ளது. மேலும், ஒரு லிங்கும் கொடுக்கபப்ட்டிருந்தது. அதனை சொடுக்கி பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.

இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் மூன்று ஆண்டுகளாகவே நடந்து வருவதாக தொலைதொடர்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். I4C அளித்தப் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஐபி முகவரிகள் அனைத்துமே சீனாவைச் சேர்ந்தவை என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் மட்டும் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 15 லட்சம் மொபைல் சேவை இணைப்புகள் தொலைதொடர்புத் துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE