நிகோபார் தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: பொது மக்கள் அச்சம்

By செய்திப்பிரிவு

நிகோபார் தீவில் கேம்ப்பெல் பே பகுதியில் இன்று (ஏப்ரல் 10) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று தொடங்கி தீவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது அதிகாலை 2.26 மணிக்குப் பதிவானது. இது கேம்பெல் பே பகுதியில் பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து என்சிஎஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. வீடுகள், கட்டிடங்கள் லேசாக அதிர்வுகளை சந்தித்தன.

முன்னதாக நேற்றும் நிகோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.59 மணியளவில் 4.1 ரிகடர் அளவிலும், மாலை 4.01 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நிகோபார் தீவில் நேற்று தொடங்கி அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்தமான் நிகோபார் தீவுகள் பிரபல சுற்றுலா தலமாக உள்ளது.

கடந்த பிப்ரவரியில் துருக்கி, சிரிய எல்லையில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 45 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுதான் மிகப்பெரிய பூகம்பமாக அறியப்படுகிறது. துருக்கி பூகம்பத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்நிலையில், நேற்றும், இன்றும் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE