ஆந்திராவில் தலைநகருக்காக உண்டியல் வசூல்

ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரை உருவாக்க பொதுமக்கள், பிரமுகர்கள் நன்கொடை அளிக்க வசதியாக ஹைதராபாதில் உள்ள தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா, ஆந்திரம் என இரண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திர மாநிலத்துக்கு நிரந்தர தலைநகரத்தை உருவாக்க வேண்டும் என்பது தலையாய பிரச்சினையாகிவிட்டது.

புதிய தலைநகரம் அமைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் நிதி உதவி கேட்டுள்ளார். மேலும் பொதுமக்கள், அரசியல்வாதிகள், வியாபாரிகள், தொழிலதிபர்களும் தலைநகருக்காக தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக பலர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

புதிய தலைநகரத்தை சிங்கப்பூர் போன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2 அமைச்சர்கள் தலைமையில் சனிக்கிழமை புதிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் விரைவில் சிங்கப்பூர் செல்ல உள்ளனர்.

இதனிடையே ஹைதராபாதில் உள்ள தலைமைச் செயலகத்தின் எல். பிளாக் பகுதி யில் மிகப்பெரிய உண்டியல் அமைக்கப்பட்டது. இந்த எல். பிளாக்கில்தான் ஆந்திர முதல்வர், தலைமைச் செயலாளர், பல உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன. இங்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வருவதால் முதலில் இங்கு உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 2 உண்டியல்களை அமைக்கவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE