சுகோய் போர் விமானத்தில் முதன்முறையாகப் பயணித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

By செய்திப்பிரிவு

தேஜ்பூர்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக இன்று (சனிக்கிழமை) சுகோய் 30 (Sukhoi 30 MKI) போர் விமானத்தில் பயணம் செய்தார். அசாமின் தேஜ்பூர் விமானப்படை தளத்திலிருந்து அவர் புறப்பட்டார். அவர் பயணத்திற்காக பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் போர் விமானத்தில் பயணித்த இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

திரவுபதி முர்மு ஏப்ரல் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை அசாமில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று தேஜ்பூர் விமான நிலையத்திலிருந்து போர் விமானத்தில் பறந்தார். முன்னதாக விமானப்படைத் தளத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதன்முதலாக பிரதீபா பாட்டீல் போர் விமானத்தில் பயணித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது புனே விமானப் படை தளத்திலிருந்து சுகோய் போர் விமானத்தில் பயணித்தார். போர் விமானத்தில் பயணித்த இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். இப்போது திரவுதி முர்மு, போர் விமானத்தில் பயணித்த இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஏபிஜே அப்துல்கலாம், ராம்நாத் கோவிந்த் ஆகியோரும் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது போர் விமானத்தில் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE