புதுடெல்லி: புனித வெள்ளி தினத்தில் இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இயேசு கிறிஸ்து, மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும்.
புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர் களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தரமான மருத்துவம்: பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டில் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தவும், மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கவும் பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. உலக சுகாதார தினத்தில், நமது கிரகத்தை ஆரோக்கியமாக மாற்ற உழைக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.