சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைநகர் சிம்லாவில் அவர் கூறியதாவது: "கஞ்சா சாகுபடியை அனுமதிப்பதன் மூலம் மாநிலத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அதோடு, இது மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதால் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொழில் துறை நோக்கங்களுக்காகவும் இதனை பயன்படுத்த முடியும். அதேநேரத்தில், கஞ்சா சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்படுமானால் அது போதைப்பொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் என்பதால் மாநில அரசு எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தை கையாள விரும்புகிறது. எனவே, இது குறித்து ஆய்வு செய்வதற்காக 5 எம்எல்ஏக்கள் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழு, கஞ்சா சாகுபடி தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் முழுமையான ஆய்வை மேற்கொள்ளும். சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடப்படும் பகுதிகளையும் இந்தக் குழு பார்வையிடும். ஒரு மாதத்திற்குள் இக்குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும். அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசு முடிவெடுக்கும்.
கஞ்சா சாகுபடி பல மாநிலங்களில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2017-ல் உத்தராகண்ட் அரசு கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கியது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும், உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களிலும் நிபந்தனைகளின் கீழ் கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது.
» அதிகரிக்கும் கோவிட் பாதிப்பு: தயார் நிலையில் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
» “ஜனநாயகத்தில் தணிக்கைக்கு இடமில்லை” - புதிய ஐடி விதிகளுக்கு சீதாராம் யெச்சூரி எதிர்ப்பு
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரியா, உருகுவே, பெல்ஜியம், செக் குடியரசு போன்ற நாடுகளிலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கஞ்சா சாகுபடி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக மாநில அரசு அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளும். மேலும், கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கிய மாநிலங்கள் பின்பற்றும் வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்'' என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.