ராகுல் காந்திக்காக நாடாளுமன்றத்தை சீர்குலைத்த எதிர்க்கட்சிகளை நாடு மன்னிக்காது: அமித் ஷா

By செய்திப்பிரிவு

கவுசாம்பி: ராகுல் காந்திக்காக நாடாளுமன்றத்தை சீர்குலைத்த எதிர்க்கட்சிகளை நாடு மன்னிக்காது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கவுசாம்பி நகரில் கவுசாம்பி மகோத்சவத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மாநில துணை முதல்வர்கள் கேசவ பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக், பாஜக மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமித் ஷா, ''நாட்டின் அனைத்து சமூகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உறுதிப்படுத்த வரும் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படியே, ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். அவர் பதவி இழந்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைத்தன; நாடாளுமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட்டுவிட்டது. நாடு இதை ஒருபோதும் மன்னிக்காது. நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் உண்மையில்லை. உண்மையில், சாதி அரசியலும், குடும்ப அரசியலுமே தற்போது ஆபத்தில் உள்ளன. அதனால்தான், எதிர்க்கட்சிகள் பதறுகின்றன'' என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE