சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் மரணம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாத்தோ சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 57.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடி மாவட்டத்தில் உள்ள தும்ரி தொகுதியில் இருந்து 4 முறை அம்மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஜகர்நாத் மாத்தோ, அம்மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். 2020-ம் ஆண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து, 2020 செப்டம்பரில் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜகர்நாத் மாத்தோவுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக 2020 அக்டோபரில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவரது நுரையீரல் சேதமடைந்ததால், அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையில் 8 மாத சிகிச்சைக்குப் பிறகு 2021 ஜூன் மாதம் ஜகர்நாத் மாத்தோ ஜார்க்கண்ட் திரும்பினார். எனினும், தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜகர்நாத் மாத்தோ, கடந்த மாதம் மீண்டும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.

சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜகர்நாத் மாத்தோ, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் மருத்துவர் அபர் ஜிந்தால் இதனை தெரிவித்தார்.

ஜகர்நாத் மாத்தோவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், 2 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார். ஜகர்நாத் மாத்தோவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, ''உடல் நலன் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிராக தொடர்ந்து போராடியவர் ஜகர்நாத் மாத்தோ. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதற்கு அப்பாற்பட்டு அவர் மதிப்புக்குரியவராக இருந்தார்'' என குறிப்பிட்டுள்ளார்.

ஜகர்நாத் மாத்தோவின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ''சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாத்தோ உயிரிழந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE