புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் புதிதாக 5,335 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 25,587 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்.23-ம் தேதிக்கு பின்னர் நாட்டில் ஒரு நாள் தொற்று பாதிப்பு 5,000-ஐ கடந்திருக்கிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 5,335 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 25,587 ஆக உயர்ந்துள்ளது. அன்றாட பாதிப்பு முந்தைய நாள் (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட 4,435 பாதிப்பைவிட 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 82 ஆயிரத்து 538 ஆக உள்ளது.
கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 பேர், பஞ்சாப் கேரளாவில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 929ஆக அதிகரித்துள்ளது.